Home ஆரோக்கியம் ஒரே இடத்தில உட்காராதீங்க! ரத்த கட்டு பாதிப்பு வரும்!

ஒரே இடத்தில உட்காராதீங்க! ரத்த கட்டு பாதிப்பு வரும்!

28

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் உடல் பருமன் கொண்டவர்களுக்கும் ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு என்று அழைக்கப்படும் ( Deep Vein Thrombosis ) நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடை அல்லது கெண்டை சதை பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தக்கட்டையே குறிக்கும். நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது, கை கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் படுக்கையில் படுத்திருப்பது. விமானம், கார்களில் நீண்ட தூரம் செல்வது, சமீப அறுவை சிகிச்சை அல்லது காயம் (குறிப்பாக இடுப்பு, முழங்கால் அல்லது மகப்பேறு அறுவை சிகிச்சை) எலும்பு முறிவு, ஈஸ்ட்ரோஜென் மற்றும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு காரணமாகின்றன. இளைய தலைமுறை பாதிப்பு வயதானவர்களுக்கும், அதிக எடை உள்ளவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நீண்டநேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் இளைய தலைமுறையினரை இது பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் பெருகி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ரத்தக் கட்டு ஏற்பட்டால் அந்த நாளத்தில் ரத்த ஓட்டத்தை முழுதுமோ அல்லது பகுதியாகவோ அடைந்துவிடும். இந்த ரத்தக்கட்டு கால் கீழ் பகுதி மற்றும் தொடை பகுதியிலேயே ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள பெரிய குருதி நாளங்களிலும் ரத்தக் கட்டு ஏற்படுவதில் இது பங்களிக்கிறது. ரத்த ஓட்டத்தை தடுத்து அல்லது ரத்தக்கட்டானது ரத்த ஓட்டத்துடனேயே சென்று ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்தும் அபாயம் மிக்கது. உயிருக்கே ஆபத்து இந்த ரத்தக்கட்டு பாதிப்புகளினால் உயிருக்கே ஆபத்தாகும் நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரத்த நாளச் சுவற்றிலிருந்து ரத்தக்கட்டு வெளியேறி நுரையீரலுக்குச் சென்று அதன் நரம்புகளை அடைக்கும். இந்த நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது. இந்த ரத்தக்கட்டு பிளசன்டாவிலுள்ள ரத்தக் குழாயில் தங்கினால் கருப்பையில் உள்ள கருவிற்கு ஆக்சிஜன் குறைவாகச் செல்லும். இதனால் குழந்தை பிறப்பு மிகுந்த பிரச்சினைக்குள்ளாகும். என்ன அறிகுறிகள் இந்த நோய்க்கான அறிகுறிகளாக கால்வலி அல்லது ஒரு காலில் வீக்கம் (Oedema) ஏற்படுதல். உடலில் உஷ்ணம் அதிகரிப்பு. சரும நிறம் சிகப்புத் தன்மையாக மாறும் என்கின்றனர் மருத்துவர்கள். ரத்தக்கட்டு இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் முதலில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காலை மேலே தூக்கும்போது வலி ஏற்பட்டால் அந்தப் பகுதியில் ரத்தக்கட்டு இருப்பதற்கான அறிகுறி உள்ளது. மேலும் இதனைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கால் ரத்த நாளத்தில் “டை” ஊசி மருந்து மூலம் செலுத்தப்பட்டு காலை எக்ஸ் ரே எடுக்கப்படுவதும் உண்டு. இந்த ரத்தக்கட்டை முன்னதாகவே கண்டுபிடித்து முறையாக சிகிச்சையளித்தால் பாதிப்பு ஏற்படாது. அதேசமயம் கவனக் குறைவாக சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்தோமானால் உயிருக்கே ஆபத்தாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அடிக்கடி நடங்க ஒரே நிலையில் நீண்டநேரம் உட்காருவது, நிற்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஓய்வு நிலையிலும் கால்களை அசைத்துக் கொண்டிருங்கள். கால் விரல் மற்றும் முழங்கால்களை மடக்கி நீட்டியபடி இருங்கள். உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது கால் மேல் கால் போடுவதை தவிர்க்கவும். நிறைய தண்ணீர் குடிங்க காலின் வழியாக செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்யும் விதத்தில் இறுக்கமாக சாக்ஸ் அணிவதை தவிர்க்கவும். உடல் நீர் வற்றாமல் பாதுகாப்பது அவசியம். விமானத்தில் செல்லும்போது நிறைய தண்ணீர் குடியுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.