Home பெண்கள் தாய்மை நலம் ஊரார் குழந்தையை பாலூட்டி வளர்த்தால்

ஊரார் குழந்தையை பாலூட்டி வளர்த்தால்

24

குழந்தை ஈன்றெடுக்கும் உற்சாகத்தோடு காத்திருந்த எனக்கு 9-வது மாதத் தொடக்கத்திலேயே ஆண் குழந்தை பிறந்துவிட்டது. மயக்க நிலையிலிருந்து மீண்டு கண் விழித்துப் பார்த்தால், என் பக்கத்தில் என் குழந்தை இல்லை… லேசான பதட்டத்துடன் அம்மாவிடம் கேட்டேன். ”குழந்தை குறை மாசத்துல பிறந்ததால், வேற ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போய் இன்குபேட்டரில் வைச்சிருக்காங்கம்மா…” என்றார். தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி, அதிகம் படித்துத் தெரிந்து கொண்டதால், பிறந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்துத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. ‘அம்மா… குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்தான் நல்ல எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்னு படிச்சேனேம்மா… குழந்தை பால் இல்லாம எப்படி இருக்கும்? நெஞ்சே வெடிச்சிடும்போல இருக்கே…’ என்று நான் அழ.. குழந்தை இருக்கிற அரசு மருத்துவமனையிலேயே என்னையும் அட்மிட் பண்ணார்கள். ஆனாலும், குழந்தை சப்பிக் குடிக்க இயலாது என்பதால், அங்குள்ள இளம் தாய்மார்களிடம் என் குழந்தைக்காக, கெஞ்சாத குறையாக தாய்ப்பால் கேட்டதும், சிலர் மனமுவந்து கொடுத்ததும்.. இன்றும் என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி.

இன்று என் குழந்தைக்கு ஒரு வயது. இன்னும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்’ என்கிறார் ஆனந்தி.
இப்படி ஆனந்தியை போல் பல பெண்களும் மனதளவில் வேதனைப் பட்டு வந்த நிலை இனி இருக்காது. தாய்ப்பால் பிரச்னைக்கு மகிழ்ச்சி ஊற்றாய் வந்துவிட்டது குறை மாதக் குழந்தைகளுக்கும் குறைவில்லாமல் தாய்ப்பால் வழங்கும் புதிய திட்டம்.
இன்குபேட்டர், வென்டிலேட்டரில் வைத்துப் பாதுகாக்கப்படும் குழந்தைகளுக்காக, ஈடு செய்ய முடியாத ஊட்டச் சத்தான தாய்ப்பாலை இனி எளிதில் பெறலாம்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கிறது தாய்ப்பால் வங்கி. பல தாய்மார்களின் நெஞ்சில் பால் வார்த்திருக்கும் இந்தச் செய்தி தேனாய் இனிக்க, இதுபற்றி, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவின் டாக்டர் குமுதாவிடம் பேசினோம்.
”இப்போது, பச்சிளம் குழந்தைகள் நிறைய அட்மிட் ஆகிறார்கள். சில நேரங்களில் தாய் ஒரு ஆஸ்பத்திரியிலும், குழந்தை இங்கும் இருப்பதால் நேரடியாகப் பால் கொடுக்க முடியாத சூழல் நிலவும். இதனால், பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகும். குழந்தையின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலோ, மருந்துகளால் தாய்ப்பால் தரமுடியாத சூழல் ஏற்பட்டாலோ தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ தாய்ப்பால் கிடைக்காமல் போகும். குறை மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்து.
அமெரிக்கா, மும்பை, ஹைதராபாத் என்று எல்லா இடங்களிலும் தாய்ப்பால் வங்கிகள் இருக்கின்றன.தாய்ப்பால் வங்கியைத் தொடங்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே முயற்சி செய்து கொண்டிருந்தோம். தற்போது தொடங்கியும் விட்டோம்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் டாக்டர் குமுதா.
”குறை மாதக் குழந்தைகள் சில, எடை குறைந்து சுமார் 800 கிராம் வரைதான் இருப்பார்கள். இந்த மாதிரிக் குழந்தைகளை, ஒரு மாதம்வரை ஆஸ்பத்திரியிலேயே இன்குபேட்டர், வென்டிலேட்டரில் வைத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது குழந்தைகளுக்கு போதிய தாய்ப்பால் கிடைக்காமல் போனால், எதிர்ப்புசக்தி இன்றி, குழந்தையின் உடல் வளர்ச்சி பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
குறை மாதக் குழந்தைகளால் தாயின் மார்புக் காம்பை வாயில் வைத்து சப்ப முடியாது. நன்றாகச் சப்பி உறிஞ்சிக் குடித்தால்தான் அந்தத் தாய்க்கும் தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆனால், 34 வாரத்துக்குப் பிறகுதான் குழந்தை நேரடியாக சப்பிக் குடிக்கும் திறனோடு பிறக்கிறது. 28-வது வாரத்தில் பிறந்த குழந்தை, இன்னும் 6 வாரம் வரை தாயிடம் நேரடியாக பால்குடிக்கக் காத்திருக்க வேண்டியிருக்கும்.
இதனால் குழந்தையைப் பெற்ற தாயின் கான்ஃபிடன்ஸ் லெவலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.
தாயிடமிருந்து குழந்தைக்கு எடுத்துக் கொடுக்கப்படும் பால் மிகவும் அவசியம்.
தற்போது எங்களிடம் உள்ள குழந்தைக்கு இந்தத் தாய்ப்பால் சேவையை செய்து கொடுத்திருக்கிறோம். இந்த தாய்ப்பாலையும், எங்கள் மருத்துவமனையில் உள்ள தாய்மார்களிடம் இருந்தே பெற்றுக் கொள்கிறோம். ஏனெனில் அந்த தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் நன்றாகத் தெரியும். இதில், தாய்ப்பால் கொடுக்கிற தாய்மாரிடமும் முழு ஒப்புதல் பெற்றப் பிறகே, பாலைப் பெற்றுக் கொள்கிறோம்” என்றார்.

பரிசோதித்தல்
ரெமி அஜிடேட்டர் கம் பாஸ்ச்சரைஸர் (remi agitator cum pasteurizer) என்ற தனி உபகரணத்தில், தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு, கிருமித்தொற்று நீக்கப்படும். ஃப்ரீசரில் 3 மாதம் வரை -20 டிகிரியில் வைத்து பாதுகாத்து கொடுக்கலாம்.
தற்போது, இந்த தாய்ப்பால் வங்கி மூலம், தினமும் சுமார் 800 எம்.எல். அளவுக்கு தாய்ப்பால் கிடைக்கிறது. குறைப் பிரசவம் என்பது அதிகரித்து விட்ட நிலையில், தாய்ப்பாலின் தேவையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த சேவையை பல இடங்களில் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். வெளியில் இருந்து தாய்ப்பால் கொடுக்க விரும்பும் தாய்மார்கள் எங்களை நேரில் அணுகலாம். தாய்ப்பால் சேவை மூலம், குறைமாதக் குழந்தைகளின் இறப்பை பெருமளவு தடுக்கலாம். அவர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். நோய் தொற்றும் அணுகாது.
இப்போது, குறை மாதக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் அதிக அளவு கொடுக்க முடிகிறது. அந்தக் குழந்தைகள் எடை கூடுவதையும் பார்க்கும்போது, ‘இனி நம் குழந்தை ஆரோக்கியமாக வளரும்’ என்ற நம்பிக்கை அந்த தாயின் முகத்தில் பிரதிபலிக்கும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, குழந்தையும் ஹெல்தியாக இருப்பது தாய்மார்களுக்கு ‘பலம்’தானே’ என்றார் டாக்டர் குமுதா நெகிழ்ச்சியுடன்.
தாய்ப்பால் தானம்
டோனர் தாயின் முழு ஒப்புதலுடன் தாய்ப்பால் பெறப்படுகிறது.
பதப்படுத்தப்பட்டு, பாக்டீரியல் கல்ச்சர் நெகடிவ் என்று வந்தால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் டோனரின் நெகடிவ் ரிசல்ட்ஸ் பார்த்துவிட்டுதான் எடுக்கப்படும். தாயின் கை வழியாக அல்லது ‘பிரெஸ்ட் பம்ப்’ மூலமாக எடுத்ததும் பாத்திரத்தில் வைத்து தாய்ப்பாலை 62.5 டிகிரிக்கு பதப்படுத்தப்படும்.
இதற்கென இரண்டு கம்பார்ட்மென்ட் உள்ள ஸ்பெஷல் ஃப்ரீசரில் வைக்கப்படும்.