Home பெண்கள் அழகு குறிப்பு உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

23

Captureஅக்காலத்தில் பெண்கள் அனைவரும் அழகாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான், உடலைப் பராமரித்து வந்தார்கள். அந்த பொருட்களாவன மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு போன்ற பல. அதனால் தான் வீட்டில் உள்ள பாட்டிகள் குளிக்கும் போது மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிக்குமாறு சொல்கிறார்கள்.

ஏனெனில் அவற்றில் பல அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் பஜ்ஜி சுடுவதற்கு பயன்படும் கடலை மாவானது ஒரு பாரம்பரிய இந்திய அழகுப் பொருள். இந்த பொருளைக் கொண்டு உடலைப் பராமரித்து வந்தால், பிம்பிள், சரும வறட்சி மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்ற பலவற்றை சரிசெய்ய முடியும்.
இப்போது உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க கடலை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

வறட்சியைப் போக்குவதற்கு…

கடலை மாவில், தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், வறட்சியானது நீங்கி, முகமானது பட்டுப்போன்று காணப்படும்.

அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க…

கடலை மாவை தயிர் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

பழுப்பு நிறத்தைப் போக்க…

சிலருக்கு சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தில் இருக்கும். அத்தகைய பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கு, 4-5 பாதாமை பவுடர் செய்து, அதில் 1 டீஸ்பூன் பால், எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், சருமம் பொலிவோடும் இருக்கும்.

பிம்பிளைப் போக்குவதற்கு…

சிலரது சருமத்தில் பிம்பிளானது அதிகம் இருக்கும். அத்தகைய பிம்பிளை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

முகத்தில் வளரும் முடியை தடுக்க…

சில பெண்களுக்கு, வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு, கடலை மாவில் மஞ்சள் தூளை சேர்த்து, நீர் ஊற்றி போஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில், முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

கருமையான முழங்கை மற்றும் கழுத்து

நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது கடலை மாவு மாஸ்க் தான். அதற்கு கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் போய்விடும்.

பொலிவிழந்த மற்றும் பாதிப்படைந்த கூந்தலுக்கு…

ஆம், கடலை மாவை கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். அதிலும் கூந்தலானது பொலிவிழந்து பாதிக்கப்பட்டு காணப்பட்டால், கடலை மாவில், தயிர் சேர்த்து கலந்து, குளிக்கும் முன் தலைக்கு தடவி 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி பட்டுப் போன்று மின்னும். மேலும் கூந்தலும் நன்கு வலிமையோடு வளரும். அதுமட்டுமல்லாமல், பொடுகுத் தொல்லையும் நீங்கும்