Published On: Thu, Jul 19th, 2012

மாட்டுக்கறி சாப்பிட்டால் உடம்புக்குக் கெடுதலா?

இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பிச் சாப்பிட்டாலும் கூட மாட்டுக் கறி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

மாட்டுக் கறியை சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.

மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இந்த நிலையில், மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்றும், கோழிக் கறியை அதிகமாக உண்டால் வாழ்நாள் நீடிக்கும் என்றும் புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு மாட்டுக்கறியை உண்பதால் இதய நோய் வருமாம். ஏனெனில் அந்த இறைச்சியில் அதிகமான அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளது. அதனால் தமனிகளில் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதோடு, வீரியம் குறைந்த நாள்பட்ட நோயையும் ஏற்படுத்தும்.

ஆனால் அதேசமயம், மாட்டுக் கறியே சாப்பிடக் கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை. மற்ற இறைச்சிகளைப் போல இதையும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அரிசி, வெண்ணெய், சீஸ் போன்றவற்றில் கூட கொழுப்புகள் உள்ளன. இருப்பினும் அவற்றை எவ்வாறு சாப்பிடுகிறோமோ, அது போலவே அந்த மாட்டுக்கறியையும் அளவோடு உண்ண வேண்டும்.

மாட்டுக்கறியைச் சாப்பிடுவதால் தமனிகளில் தடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டாம். ஏனெனில் மிருகத்தின் கொழுப்பானது தமனிகளில் தங்கி, இரத்த ஒட்டத்தை தடுக்கும். அதனால் மாரடைப்புகள் கூட ஏற்படும் என்கிறார்கள்.

மாட்டுக்கறியை அதிக அளவில் உண்போருக்கு குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாம். இருப்பினும் இதை நிரூபிக்க இதுவரை எந்த சான்றும் இல்லை. மாட்டுக்கறியில் உள்ள கார்சினோஜென், புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள். ஆகவே அளவுக்கு அதிகமாக மாட்டுக்கறியை உண்டால் உடலில் கார்சினோஜென்னின் அளவு அதிகரிக்கும். இதனால் புற்று நோய் வரலாம் என்று கணிக்கப்படுகிறது.

மாட்டுக்கறியில் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை அதிகமாக உண்டால் உடலானது அதிக எடை அடையும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் எந்த சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் போதிய உடல் இயக்கம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாதாரணச் சாப்பாடு சாப்பிட்டாலும் கூட எடை கூடத்தான் செய்யும்.

எதுவாக இருந்தால் என்ன, அளவோடு உண்டால் வளமோடும், நலமோடும் வாழலாம். அது மாடாக இருந்தாலும் சரி கோழியாக இருந்தாலும் சரி…

Leave a comment

You must be Logged in to post comment.