Published On: Thu, Mar 29th, 2012

சோகப் படத்தைப் பார்த்து அழாதீங்க, குழந்தைக்கு நல்லதில்லை!

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சோகமான திரைப்படம் பார்ப்பது, துக்கமாக உணர்வது கூட குழந்தைகளின் குணாதியங்களில் பிரதிபலிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருவில் உள்ள குழந்தை தாயின் மனநிலைக்கு ஏற்ப செயல்படும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனஅழுத்தமான சூழலில் கர்ப்பிணி இருந்தால் அது குழந்தையின் ஐ க்யூ திறனை பாதிக்கும் என்றும், அதிகம் உணர்ச்சிவசப்படும் தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் ஹைபர் ஆக்டிவாக இருப்பார்கள் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கர்ப்பிணி தாய்மார்கள் சோகமான திரைப்படத்தை பார்த்தால் அது கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற ஆய்வில் கர்ப்பிணிகள் சிலர் மகிழ்ச்சிகரமான இசையைக் கொண்ட 5 நிமிடம் ஓடக்கூடிய திரைப்படத்தை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் அழுகை வரக்கூடிய சோகமான திரைப்படத்தின் கிளிப்பிங்ஸ் ஒன்றை வேறு சில கர்ப்பிணிகள் பார்க்குமாறு ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் இவர்களின் கருவில் உள்ள குழந்தைகள் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் மகிழ்ச்சிகரமான திரைப்படத்தை பார்த்த தாய்மார்களின் கருவில் இருந்த குழந்தைகள் சந்தோசமாக கை, காலை ஆட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தின.

அதேசமயம் சோகமான திரைப்படத்தை பார்த்தவர்களின் கரு குழந்தைகள் அமைதியாக எந்த வித அசைவும் இன்றி இருந்தது தெரியவந்தது.

இதனால்தான் நம்முன்னோர்கள் கர்ப்பிணிப் பெண்களை எந்தவிதமான துக்ககரமான சம்பவங்கள் பாதிக்காமல் பார்த்துக்கொண்டனர். கர்ப்பிணிகள் இனிய இசையை கேட்கவேண்டும். நல்ல புத்தகங்களை படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதும் அதனால்தான்.

எனவே கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக, தேவையான -சத்தான உணவு வகைகளை உண்டு வர வேண்டும்.

தேவையற்ற வீண் கவலைகளை தவிர்த்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்து மகிழ்ச்சியாக இருங்கள்.

Leave a comment

You must be Logged in to post comment.