Published On: Sat, Jul 21st, 2012

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுறீங்களா? கொஞ்சம் கவனிங்க!

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஒவ்வொரு கவளம் உணவையும் சரியாக கொடுத்தால் மட்டுமே அவர்கள் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு எவ்வாறு உணவு ஊட்டவேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் படியுங்களேன்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பொறுமை அவசியம். சீக்கிரம் சாப்பிட்டால் ஐஸ்கிரீம் வாங்கித்தரேன், மிட்டாய் வாங்கித்தருகிறேன் என்று கூறுவது தவறான முன் உதாரணமாகும்.
குழந்தைகளின் உணவில் 90 சதவிகிதம் சத்தான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மீதமுள்ள 10 சதவிகிதத்தில் இனிப்பு, பொறித்த உணவுப்பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பழங்கள், காய்கறிகளை வெவ்வேறு வடிவங்களில் வெட்டி கொடுத்தால் அவர்கள் சாப்பிடுவார்கள்.
உணவு உண்ணும் போது குழந்தைகள் கீழே மேலே சிந்திதான் சாப்பிடும் எனவே அதற்காக குழந்தைகளை அடிக்கவேண்டாம். குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்கவேண்டாம் வடிவத்தையோ, நிறத்தையோ மாற்றிக் கொடுங்கள் அதுவே உணவு உண்பதில் குழந்தைகளுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும். சிறுசிறு சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் குழந்தைகளுக்கு உணவில் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
வீடுகளில் குளிர்பானங்களையோ, சிப்ஸ் போன்ற பொருட்களையோ வாங்கிவைக்காதீர்கள். அவற்றை கூடுமானவரை வாங்கி வைக்காமல் இருப்பது நல்லது. கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், எனர்ஜிபானங்கள், பழச்சாறுகள் போன்றவைகளில் எந்த சத்தும் இருப்பதில்லை. அதில் உள்ள ரசாயனங்களினால் குழந்தைகளின் உடலுக்குத்தான் கெடுதல் என்று ஜெனரல் பீடியாட்டிரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a comment

You must be Logged in to post comment.